Thursday, 12 November 2020

நா. முத்துச்சரம் #4: நதிகள் காய்ந்தலும் காட்சிகள் காய்வதில்லை

திரைமொழியின் அழகு நாம் காண்பதிலும் கேட்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. ஒருவனின் மனத்துக்குள்ளேயே திகழும் மகிழ்ச்சியையோ சோகத்தையோ ஒரு புதினம் அல்லது சிறுகதை சில வரிகளிலும் பத்திகளிலும் விவரிக்கும் அளவுக்கான எளிமை திரைமொழிக்கு வாய்ப்பதில்லை. திரைப்படத்தின் படைப்பாளிகள் அதன் பார்வையாளர்களுக்கு அந்த மன ஓட்டங்களைக் கண்டிப்பாகக் காட்டவோ கேட்கவோ வைக்கவேண்டும்.

அப்படித்தான் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என, பல கலைஞர்களின் தேவை உருவாகிறது. ஒருவன் தனியாக ஒரு அறையில் இருப்பதைப் படமாக்கிவிட்டால் அவன் தனிமையிலும் துக்கத்திலும் இருப்பதை உணர்த்திவிடமுடியுமென்றால், மிஸ்டர் பீன்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். அப்படியென்றால் அவன் தனிமையையும் சோகத்தையும் பிற உள்ளுணர்வுகளையும் எப்படி பார்வையாளர்களிடம் கடத்துவது? அந்தக் கடத்தலை ஒளி ஒலி வடிவத்தில் செய்வதுதான் திரை கலை.